செய்திகள்

ரூ.15 கோடி மோசடி: கோவை பேராயர் மீது வழக்குபதிவு

Published On 2017-02-25 05:03 GMT   |   Update On 2017-02-25 05:03 GMT
திருப்பூர் அருகே ரூ.15 கோடி மோசடி செய்ததாக கோவை பேராயர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர்:

திருப்பூர் அவினாசி ரோட்டில் சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலயம் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தின் ஆயராக பாதிரியார் விஜயன் (வயது 58) பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் திருப்பூர் வலையங்காட்டை சேர்ந்த திலீப்குமார் , திருப்பூர் ஜே.எம்.1 கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.

அதில் சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலயத்தில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை ரூ.15 கோடி வரை மோசடி நடந்துள்ளது என்றும் மேலும் தான் நன்கொடையாக வழங்கிய ரூ.10 ஆயிரத்தை தேவாலய கணக்கில் வரவு வைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். மேலும் இந்த மோசடியில் உடந்தையாக இருந்த கோவை பேராயர் திமோத்தி ரவீந்தர், திருப்பூர் ஆயர் விஜயன் உள்பட 12 பேர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி கோவை பேராயர் திமோத்தி ரவீந்தர், செயலாளர் பிரின்ஸ் கால்வின், பொருளாளர் சாமுவேல் டேவிட் மங்கல் தாஸ், திருப்பூர் பகுதி தலைவர் பாதிரியார் வில்சன் குமார், திருப்பூர் சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலய ஆயர் விஜயன், செயலாளர் ஜான் சந்திர ராஜ், பொருளாளர் தாய் மணி ஜோசப், சி.எஸ்.ஐ. தூய பவுல் தேவாலய முன்னாள் ஆயர் வில்சன் பிரேம்குமார், முன்னாள் செயலாளர் மற்றும் பொருளாளர் பிராங்கின் பரி மளராஜ், ஆலோசகர் ஜெய ரூபன் ஜான்சன், அவரது மனைவி பெர்சியா லிடியா , கமிட்டி உறுப்பினர் வில்சன் ஆகிய 12 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News