செய்திகள்

ஈஞ்சம்பாக்கத்தில் வியாபாரி வீட்டில் 90 பவுன் நகை கொள்ளை

Published On 2017-01-30 03:30 GMT   |   Update On 2017-01-30 03:30 GMT
ஈஞ்சம்பாக்கத்தில் வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 90 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் சோழமண்டல தேவி நகர், 6-வது தெருவைச் சேர்ந்தவர் அன்சாரி (வயது 50). இவர், சென்னை மயிலாப்பூரில் ‘பேன்சி’ கடை நடத்தி வருகிறார். இவருடைய மைத்துனருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதனால் அன்சாரி, நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்துடன் வெளியே சென்று விட்டார். இரவில் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த துணிகள் கீழே சிதறிக்கிடந்தன. பீரோவில் சோதனை செய்தபோது அதில் வைத்து இருந்த 90 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.

இது குறித்த புகாரின் பேரில் நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோல் ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பழனி (40) என்பவர் வீட்டின் பின்பக்க வழியாக உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், வீட்டில் இருந்த 2 செல்போன்கள், ரூ.10 ஆயிரம் பணத்தை திருடிச்சென்று விட்டனர். இது பற்றி நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Similar News