செய்திகள்
பவானி ஆற்றில் மூழ்கி பலியானவர்களை படத்தில் காணலாம்.

பவானி ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி: போலீசார் விசாரணை

Published On 2017-01-16 05:50 GMT   |   Update On 2017-01-16 05:50 GMT
4 பேர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் பவானிசாகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பு.புளியம்பட்டி:

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை என்ற ஊரை சேர்ந்தவர் தேவசகாயம்(வயது63).இவரது வீட்டுக்கு குன்னூரை சேர்ந்த உறவினர் ஜோசப் பவுல்ராஜ்(29) மற்றும் இவரது மனைவி ஆசாத் ஜெனிபர் ஆகியோர் வந்தனர். இவர்கள் புதுமண தம்பதியினர்.

இதே போல் பொங்கல் விடுமுறையை கழிக்க உறவினர்களான திருச்சி கல்லூரி மாணவர்கள் பிரான்சிஸ்(22) மற்றும் அர்வின்(22), எட்வின் ஆகியோரும் வந்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை நெரிஞ்சிப்பேட்டையில் ஓடும் பவானி ஆற்றுக்கு அவர்கள் வந்தனர்.பிறகு பரிசலில் ஆற்றில் பயணம் செல்ல விரும்பினர்.

அதன்படி ஒரு பரிசலில் ஜோசப்பவுல்ராஜ், இவரது மனைவி ஆசாத் ஜெனிபர் மற்றும் பிரான்சிஸ், அர்வின், எட்வின் ஆகியோர் ஏறினர். பரிசலை அதே பகுதியை சேர்ந்த டேவிட்பிரான்சிஸ்(45) என்பவர் ஓட்டி சென்றார்.

ஜாலியாக அவர்கள் செய்த பரிசல் பயணம் இன்னும் சிறிது நேரத்தில் பெரும் சோகத்தில் முடியும் என்பதை அவர்கள் உணரவில்லை. குடிநீருக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடபட்டதால் பவானி ஆற்றில் சிறிது தண்ணீர் ஒடி கொண்டிருந்தது.

ஆற்றின் நடுப்பகுதியில் சென்ற போது திடீரென பரிசலில் ஓட்டை விழுந்ததாக தெரிகிறது.இதனால் பரிசலில் தண்ணீர் குபு...குபு...வென ஏறி அடுத்த வினாடி பரிசல் ஆற்றில் கவிழ்ந்தது.

தண்ணீரில் விழுந்த 6 பேரும் தத்தளித்தனர். பரிசல் ஓட்டி டேவிட் பிரான்சிஸ்,எட்வின் ஆகியோர் நீந்தி ஒரு வழியாக கரைக்கு வந்து உயிர் தப்பினர்.

ஜோசப் பவுல்ராஜ், ஆசாத் ஜெனிபர், பிரான்சிஸ், அர்வின் ஆகியோருக்கு நீச்சல் தெரியாததால் இவர்கள் 4 பேரும் பவானி ஆற்றில் மூழ்கி பலியானார்கள்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் பவானிசாகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News