செய்திகள்

ஈரோடு வரும் ரெயில்கள் 30 நிமிடம் தாமதம்

Published On 2016-12-23 09:49 IST   |   Update On 2016-12-23 09:49:00 IST
கடும் பனிமூட்டம் காரணமாக ஈரோடு வரும் ஏற்காடு எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து ரெயில்களும் 30 நிமிடம் தாமதமாக வந்தன.
ஈரோடு:

ஈரோடு, கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்துக்குப் பிறகு இன்று கடும் பனி மூட்டம் இருந்தது.

இந்த பனிப்பொழிவு காரணமாக நள்ளிரவு மற்றும் அதிகாலையில் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அனைத்து வாகனங்களும் முகப்பு விளக்குகளை போட்டபடியே சென்றன.

இதேபோல் பனிமூட்டம் காரணமாக ரெயில்களின் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து ஈரோடு வழியாக கோவை, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலம் செல்லும் அனைத்து ரெயில்களும் இன்று காலை 30 நிமிடம் தாமதமாகவே வந்தன.

இன்று காலை ஈரோடு வரும் ஏற்காடு எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், சேரன் எக்ஸ்பிரஸ், கே.கே. எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து ரெயில்களும் இன்று ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வழக்கமான நேரத்தைவிட 30 மற்றும் 40 நிமிடம் தாமதமாகவே வந்தது.

சென்னையில் இருந்து வந்த ஒரு எக்ஸ்பிரஸ் என்ஜின் டிரைவர் கூறும்போது, ‘‘வழியில் தண்டவாளம் முழுவதும் பனி படலம் புகை மண்டலம் போல் இருந்தது. இதனால் வேகமாக செல்ல முடியவில்லை’’ என்று கூறினார்.

Similar News