செய்திகள்
கடல் நீர் வீடுகளுக்குள் புகுவதை அதிர்ச்சியில் பார்க்கும் பொதுமக்கள்

கோட்டைப்பட்டினம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த கடல் நீர்

Published On 2016-11-18 10:31 IST   |   Update On 2016-11-18 10:31:00 IST
புதுக்கோட்டை அருகே வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததால் சுனாமி பீதியில் பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர்.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் ஒரு மீன்பிடி துறைமுக பகுதியாகும். இங்கு கடற்கரையோரங்களில் சுமார் 2,500 வீடுகளுக்கு மேல் உள்ளன. இவர்கள் பெரும்பாலும் மீன் பிடி தொழிலையே நம்பியே வாழ்கின்றனர்.

இந்த நிலையில் நேற்று திடீரென கடலில் மாற்றங்கள் ஏற்பட்டது. அலையின் வேகமும் அதிகமாக காணப்பட் டது. கரைகளில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் அலையில் அலைக்கழிக்கப்பட்டன.

மேலும் பலத்த காற்று காரணமாக படகுகளை இயக்க மீனவர்கள் பெரிதும் சிரமப்பட்டனர். இப்படியொரு மாற்றத்தை அப்பகுதி மக்கள் இதுவரை கண்டதில்லை என கூறினர்.

இதற்கிடையே திடீரென கடல் அலைகள் கட்டுக்கடங்காமல் கரையை தாண்டியது. தொடர்ந்து அலைகளின் சீற்றம் அதிகமாகி வெளியேறிய தண்ணீர் கடற்கரையோரம் உள்ள வீடுகளுக்குள் அதிரடியாக புகுந்தது.

உயரமான பகுதிகளில் சுமார் 20 மீட்டரும், தாழ்வான பகுதிகளில் 100 மீட்டரும் கடல் நீர் வெளியேறியது. இதனால் அப்பகுதி மக்கள் சுனாமி வந்து விட்டதாக நினைத்து பீதி அடைந்தனர். பலர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்றனர்.



இதனால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கடலின் சீற்றம் மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. மீண்டும் கடல் அலைகளை கட்டுப்படுத்தி கடலின் உள்ளே இழுத்தது. ஆனாலும் கோட்டைப்பட்டினம் பொதுமக்கள் இன்னும் சுனாமி பீதியில் தான் உள்ளனர்.

இந்த கடல் சீற்றம் குறித்து கடலோர பாதுகாப்பு படையினர் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Similar News