செய்திகள்

பண்ருட்டி பகுதியில் அதிரடி சோதனை: 2 போலி டாக்டர்கள் கைது

Published On 2016-10-15 10:37 IST   |   Update On 2016-10-15 10:37:00 IST
பண்ருட்டி பகுதியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி:

பண்ருட்டி தாலுகா மற்றும் நெல்லிக்குப்பம் பகுதியில் போலி டாக்டர்கள் இருப்பதாக சுகாதார துறைக்கு புகார் வந்தது.

இதையடுத்து கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மாதவி தலைமையிலான குழுவினர் நெல்லிக்குப்பம் அருகே உள்ள சி.என்.பாளையத்தில் உள்ள கிளினிக்குக்கு சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்த கீழ்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த தண்டபாணி (வயது 38) என்பவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், பல் மருத்துவத்துக்கு படிக்காமலேயே நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரிய வந்தது.

இது குறித்து வட்டார மருத்துவ அலுவலர் ராஜகணபதி, நடுவீரப்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டபாணியை கைது செய்தனர்.

இதேபோல் பண்ருட்டியிலும் போலி டாக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டனர்.

பண்ருட்டி காமராஜர் நகர் போலீஸ் லைனை சேர்ந்தவர் நீலமேகம் (50). இவர் மருத்துவம் படிக்காமல் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரி எதிரில் உள்ள மருந்து கடையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக அரசு டாக்டர் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நீலமேகத்தை கைது செய்தனர்.

Similar News