செய்திகள்

திருப்பத்தூரில் லாரி மோதி அரசு அதிகாரி பலி

Published On 2016-09-29 04:17 GMT   |   Update On 2016-09-29 04:17 GMT
திருப்பத்தூரில் இன்று லாரி மோதியதில், நடைபயிற்சியில் ஈடுபட்ட அரசு அதிகாரி பலியானார்.
திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மருதுபாண்டியன் நகரைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது57). இவர் எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார்.

தினமும் அதிகாலையில் கண்ணன் நடைபயிற்சி செல்வது வழக்கம். இன்று (வியாழக்கிழமை) காலையும் அவர் வீட்டில் இருந்து நடைபயிற்சிக்கு சென்றார்.

வீட்டில் இருந்து பூங்கா அருகே அவர் வந்தபோது, மதுரையில் இருந்து காய்கறி ஏற்றிக் கல்லல் நோக்கி சென்ற லாரி வந்தது. அந்த லாரி எதிர்பாராதவிதமாக, கண்ணன் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர், பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து கண்ணனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் கண்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்துக்கு காரணமான லாரி டிரைவர், தப்பி ஓடி விட்டதால் அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News