செய்திகள்

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை

Published On 2016-09-21 13:41 IST   |   Update On 2016-09-21 13:41:00 IST
வீடுகட்ட அனுமதி கோரி பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி:

பழவேற்காடு, கரிமணல் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தங்களுக்கு அரசு ஒதுக்கிய நிலத்தில் வீடு கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி கடந்த 17-ந்தேதி முதல் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு பெண் தீக்குளிக்க முயன்றார்.

நேற்று அவர்களது போராட்டம் 4-வது நாளாக தொடர்ந்தது. அப்போது டி.எஸ்.பி. கண்ணன் மற்றும் போலீசார் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகுமாறு தெரிவித்தனர். இதனால் கிராம மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

இதையடுத்து உண்ணாவிரதம் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 184 பேரை கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் பொன்னேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அவர்களை கிராமத்திற்கு செல்லுமாறு அதிகாரிகளும், போலீசாரும் தெரிவித்தனர்.

ஆனால் அரசு ஒதுக்கிய நிலத்தில் வீடு கட்ட அனுமதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கூறி கிராம மக்கள் திருமண மண்டபத்தை விட்டு வெளியேற மறுத்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மண்டபத்தில் இருந்த பொன்னன், மல்லிகா, சரோஜா, பூபதி உள்பட 10 பேருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது. அவர்களில் 3 பேர் பழவேற்காடு அரசு ஆஸ்பத்திரியிலும், 7 பேர் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே இன்று காலை திருமண மண்டபத்தில் இருந்த அனைவரும் பேரணியாக கோட்டாட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்தனர். அவர்கள் வந்த போது அலுவலகம் திறக்கப்படவில்லை. இதையடுத்து கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்கள் அமர்ந்தனர்.

இதனால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

Similar News