செய்திகள்

10-ம் வகுப்பு படித்து விட்டு ஆஸ்பத்திரி நடத்தி வந்த போலி டாக்டர் கைது

Published On 2016-09-08 09:26 IST   |   Update On 2016-09-08 09:26:00 IST
10-ம் வகுப்பு படித்து விட்டு ஆஸ்பத்திரி நடத்தி வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு:

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டாக்டருக்கு படிக்காமலேயே டாக்டர் என்று கூறி பலர் பொதுமக்களுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார்கள்.

இதனால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் காரணமாக தமிழ்நாடு முழுவதும் போலி டாக்டர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள்.

இது போல ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் போலி டாக்டர்கள் உள்ளார்களா? என்று போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் ஈரோடு அருகே அவல் பூந்துறையில் உள்ள வெள்ளோடு ரோட்டில் ஒருவர் டாக்டருக்கு படிக்காமலேயே பொதுமக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்தது தெரிய வந்தது.

இதையொட்டி அரச்சலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது அங்கு ஆஸ்பத்திரி நடத்தி வந்த விஜய பூபதி (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ள அவர் அந்த பகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக ஆஸ்பத்திரி நடத்தி வந்ததும், ஏராளமான பொதுமக்களுக்கு அவர் வைத்தியம் பார்த்ததும் தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட விஜய பூபதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 10-ம் வகுப்பு மட்டுமே படித்த போலி டாக்டரிடமா நாம் இதுவரை வைத்தியம் பார்த்தோம்? என்று அவர்கள் அதிர்ச்சியுடன் கூறினர்.

Similar News