செய்திகள்
ஈரோடு வழியாக சைக்கிளில் சென்ற சிவபாஸ்கர பரதேசி.

தமிழ்நாடு முழுவதும் தூத்துக்குடி முதியவர் சைக்கிளில் பிரசாரம்

Published On 2016-09-06 10:08 IST   |   Update On 2016-09-06 10:08:00 IST
பசியுடன் இருப்பவர்களுக்கு உணவளியுங்கள் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தூத்துக்குடி முதியவர் சைக்கிளில் பிரசாரம் மேற்கொண்டார்.
ஈரோடு:

தூத்துக்குடியை சேர்ந்தவர் சிவபாஸ்கரன். தன்னை ஒரு பரதேசி (சாமியார்) என்று கூறிக்கொள்ளும் இந்த 70 வயது முதியவர் தமிழகம் முழுவதும் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.

சிவ பாஸ்கர சாமியார் சைக்கிளில் ஈரோடு வழியாக சென்றார். அப்போது அவர் தான் செல்லும் வழியில் கண்ட மக்களுக்கு துண்டு நோட்டீசை விநியோகம் செய்து பேசினார்.

பொது மக்கள் மத்தியில் அவர் பிரசாரம் செய்து பேசியதாவது:-

முதலில் நம் தாய்-தந்தையரை வணங்குங்கள் அவர்கள்தான் முதலில் நாம் வணங்க வேண்டிய தெய்வங்கள். அப்புறம் வேண்டுமானால் கோவிலுக்கு செல்லுங்கள்.

நீங்கள் செய்ய வேண்டியது. மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள், செய்யக்கூடாதது பயனற்ற விவாதத்தை தவிருங்கள். முறையான வாழ்க்கைக்கு உழைப்பு, திறமை நேர்மை இந்த மூன்றும் வேண்டும்.

எப்போதும் உங்களிடம் இருக்க வேண்டியது. நாட்டுப்பற்று, மொழிப்பற்று, நாம் ஒவ்வொருவரும் தமிழனாக வாழ வேண்டும்.

மிகப்பெரிய நோய் பேராசை அதை அண்ட விடாதீர்கள் விரட்டியடியுங்கள். மிகவும் கீழ்த்தரமான வி‌ஷயம் பொறாமை அதை விட்டொழியுங்கள். மிகவும் வேண்டியது பணிவு வேண்டாதது வெறுப்பு.

கோழி, ஆடு, மாடு, மீன் போன்ற ஊர்வன, பரப்பன, கால்நடைகளை துடிதுடிக்க ரத்தம் சொட்டச்சொட்ட கொன்று இறந்த உயிர்களின் பிண உடலை உண்பது அறிவியல் ஆகுமா? ஆன்மீகம் ஆகுமா? மனிதத்தன்மை ஆகுமா? எல்லாம் உயிர்களையும் எரிக்கும் சுடுகாடா... உங்கள் வயிறு? உயிர் உடம்பே ஆலயம். உயிர் இரக்கமே வழி. ஆகவே உயிர்களை கொல்லாதீர்கள் மாமிசங்களை உண்ணாதீர்.

மதி கெடுக்கும் கொடிய மதுவை அருந்தாதீர். எல்லா உயிர்களின் பசியை தீர்ப்பது பரம புண்ணியம். பசியுடன் உள்ளவர்களுக்கு உணவளியுங்கள். அவர்களின் பசியை போக்குங்கள்.

இவ்வாறு வழி நெடுக பிரசாரம் செய்தபடி சென்றார் சிவபாஸ்கர பரதேசி.

Similar News