செய்திகள்

கோடியக்கரைக்கு வழிதவறி வந்த இலங்கை தம்பதிக்கு 5-வது முறையாக காவல் நீட்டிப்பு

Published On 2016-08-04 11:41 IST   |   Update On 2016-08-04 11:41:00 IST
இலங்கையிலிருந்து வழிதவறி கோடியக்கரை வந்த தம்பதிக்கு வேதாரண்யம் கோர்ட்டில் 5-வது முறையாக காவல் நீடிக்கப்பட்டது.

வேதாரண்யம்:

இலங்கையிலிருந்து வழிதவறி கோடியக்கரை வந்த தம்பதிக்கு வேதாரண்யம் கோர்ட்டில் 5-வது முறையாக காவல் நீடிக்கப்பட்டது.

இலங்கை வவுனியா அடுத்து மகரம்மை குளத்தை சேர்ந்தவர் துஷ்யந்த்(23) விவசாயி. இவரது மனைவி துவாரகா(22) 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்களது மகள் சகிதா(1) ஆகிய 3 பேரும் கடந்த ஜூன் 7-ம் தேதி கச்சத்தீவிலுள்ள மாதா கோவில் திருவிழாவிற்கு பொதுமக்களுடன் ஒரு படகில் வந்தனர். அங்கு பிரார்த்தனையை முடித்துக் கொண்டு கச்சத்தீவை சுற்றி பார்த்தனர். பிறகு படகுத்துறைக்கு வந்த போது அவர்கள் வந்த படகை காணவில்லை.

இதைத் தொடர்ந்து படகுத்துறையில் நின்று கொண்டிருந்த பைபர் படகில் ஏறி தூங்கினர். அப்போது கயிறு அறுந்து படகு கடலுக்குள் சென்றது. அவர்கள் தூங்கி எழுந்து பார்த்தபோது நடுக்கடலில் படகு நின்று கொண்டிருந்தது. நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த மீனவர்கள் 3 பேரையும் மீட்டு நாகைக்கு கொண்டு வந்தனர்.

பின்பு மூவரையும் வேதாரண்யம் கடலோர காவல் நிலைத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி பாஸ்போர்ட் இல்லாமல் வந்ததாக வழக்கு பதிவு செய்து கைது செய்து வேதாரண்யம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி தீனதயாளன் உத்தரவிட்டார். இதையடுத்து மூவரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று 5-வது முறையாக மீண்டும் வேதாரண்யம் நீதிமன்றத்தில் மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு வருகிற 17-ந்தேதி வரை காவலை நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தவிட்டார். இதனையடுத்து மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News