செய்திகள்

64-வது முறையாக சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி கதவு உடைந்து விழுந்ததால் பரபரப்பு

Published On 2016-06-30 04:30 IST   |   Update On 2016-06-30 04:30:00 IST
சென்னை விமான நிலையத்தில் 64-வது முறையாக கண்ணாடி கதவு உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆலந்தூர் :

சென்னை விமான நிலையத்தில் 64-வது முறையாக கண்ணாடி கதவு உடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக புதிய முனையங்கள் செயல்பட்டு வருகின்றன.

விமான நிலையத்தில் இதுவரை 15 முறை மேற்கூரைகள் இடிந்து விழுந்து உள்ளன. 20 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 21 முறை தடுப்பு கண்ணாடிகளும் உடைந்து உள்ளன. 5 முறை சுவரில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்கள் பெயர்ந்து விழுந்து உள்ளன.

ஒரு முறை விளக்கு கண்ணாடி, ஒரு முறை அறிவிப்பு பலகை டி.வி. நொறுங்கி உள்ளன. இதுவரை 63 முறை நடைபெற்று உள்ள இந்த சம்பவங்களில் 11 பேர் காயமடைந்து உள்ளனர்.

மீனம்பாக்கம் பன்னாட்டு முனையம் புறப்பாடு பகுதியில் 2-வது நுழைவு வாயில் பகுதி அருகே பண பரிமாற்றம் செய்யும் கவுண்ட்டர் உள்ளது. இந்த கவுண்ட்டரின் கண்ணாடி கதவு 8 அடி உயரம், 4 அடி அகலம் கொண்டது.

நேற்று காலை திடீரென இந்த கண்ணாடி கதவு உடைந்து விழுந்தது. 64-வது முறையாக நடைபெற்ற இந்த சம்பவத்தால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுபற்றி விமான நிலைய ஊழியர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்து பார்த்த அதிகாரிகள், நொறுங்கி கிடந்த கண்ணாடி கழிவுகளை ஊழியர்களை கொண்டு அப்புறப்படுத்தினார்கள்.

பயணி யாராவது டிராலியால் இடித்ததில் கண்ணாடி கதவு உடைந்து இருக்கலாம் என்றும், இதுபற்றி விசாரித்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Similar News