செய்திகள்

ராட்டினம் உடைந்து ஊழியர் பலி: நிர்வாகிகள் 2 பேர் கைது

Published On 2016-05-12 12:15 IST   |   Update On 2016-05-12 12:15:00 IST
தாம்பரம் அருகே ‘கிஷ்கிந்தா’ பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் உடைந்து ஊழியர் பலியானதால் நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

தாம்பரம் அருகே ‘கிஷ்கிந்தா’ பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. கோடை விடுமுறையையொட்டி சுற்றுலா பயணிகளை கவர ‘டிஸ்கோ’ என்ற புதுவகை ராட்டினம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த ராட்டினம் பயன்பாட்டில் இல்லை.

நேற்று மாலை பூங்கா நேரம் முடிந்ததும் ‘டிஸ்கோ’ ராட்டினத்தை இயக்கி பார்க்க ஊழியர்கள் முடிவு செய்தனர். சுமார் 25 ஊழியர்கள் ராட்டினத்தில் அமர்ந்து இருந்தனர்.

ராட்டினம் வேகமாக சுழன்றபோது திடீரென 3 துண்டுகளாக உடைந்து விழுந்தது. அதிலிருந்து விழுந்த 25 ஊழியர்களும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு தாம்பரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே குன்றத்தூரை அடுத்த புதுநல்லூரை சேர்ந்த மணி (வயது 25) பலியானார்.

மேலும் கேசவன், சைபுதீன், குணசேகரன், தயாளன், லோகேஷ், தினேஷ், தென்னரசு, அசோகன், கலையரசு உள்பட 24 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது பற்றி அறிந்த காயம் அடைந்தவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.

பலத்த காயம் அடைந்த ஒருவர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்த விபத்து குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூங்கா நிர்வாகிகள் 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதற்கிடையே பொழுது போக்கு பூங்காவில் ராட்டினம் உடைந்து ஊழியர் பலியான சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் கஜலட்சுமி உத்தரவிட்டு உள்ளார். ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் தலைமறைவான தனிக்குழுவினர் இன்று பூங்காவில் ஆய்வு செய்கிறார்கள்.

Similar News