செய்திகள்

ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த என்ஜினீயர் கொன்று புதைப்பு: நண்பர் வெறிச்செயல்

Published On 2016-04-13 09:02 IST   |   Update On 2016-04-13 09:02:00 IST
ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் என்ஜினீயரை, அவருடைய நண்பரே கொன்று வீட்டு தோட்டத்தில் புதைத்தார்.
கடலூர்:

கடலூரை அடுத்த கோண்டூர் தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் நகரை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரது மகன் சதீஷ்குமார் (வயது 29). என்ஜினீயரான இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். கடந்த 1-ந்தேதி வேலைக்குச்சென்ற சதீஷ்குமார் மீண்டும் வீடு திரும்பவில்லை.

புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தியதில், சதீஷ்குமாரின் செல்போனுக்கு அவருடைய நண்பர் தினேஷ் கடைசியாக பேசியிருப்பது தெரியவந்தது. ஆனால் தலைமறைவான தினேஷ் போலீஸ் தேடுவதை அறிந்ததும் தேவனாம்பட்டினம் கிராம நிர்வாக அதிகாரியிடம் நேற்று காலை சரண் அடைந்தார்.

விசாரணையில் சதீஷ்குமாரை கொன்று புதைத்ததை தினேஷ் ஒப்புக்கொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கடந்த 1-ந்தேதி அன்று வேலைக்கு சென்ற சதீஷ்குமார், இரவு மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவரை செல்போனில் தொடர்பு கொண்ட தினேஷ், தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். அதன்படி அவர், தினேஷ் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் அவர்கள் கடலூருக்கு சென்று சினிமா பார்த்து விட்டு மீண்டும் தினேஷ் வீட்டுக்கு சென்றனர். அங்கு மது அருந்திய தினேஷ், சதீஷ்குமாரை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்தார். அதற்கு சதீஷ்குமார் மறுத்ததால், ஆத்திரம் அடைந்த தினேஷ் சதீஷ்குமாரை தாக்கினார். படுகாயம் அடைந்த சதீஷ்குமார் அந்த இடத்திலேயே இறந்து விட்டார்.

இதையடுத்து சதீஷ்குமாரின் உடலை வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் தினேஷ் புதைத்தார். மேலும் சதீஷ்குமாரின் மோட்டார்சைக்கிளை தேவனாம்பட்டினம் அருகே முட்புதருக்குள் போட்டுவிட்டு தினேஷ் சென்னைக்கு சென்று விட்டார். பின்னர் ஊர் திரும்பிய அவர் போலீசார் தேடுவதை அறிந்ததும், கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்தார்.

இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் இன்று (புதன்கிழமை) சதீஷ்குமாரின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.

Similar News