செய்திகள்

இந்தியாவில் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் புதுவைக்கு 13–வது இடம்

Published On 2016-04-11 14:54 IST   |   Update On 2016-04-11 14:54:00 IST
இந்தியாவின் சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் 13–வது இடத்தைப் பிடித்து சாதனை புரிந்துள்ளது.
புதுச்சேரி:

பாராளுமன்ற ஒப்புதலுடன் 1985–ம் ஆண்டு புதுவை காலாப்பட்டில் மத்திய பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அப்போதைய பிரதமர் ராஜிவ்காந்தி பல்கலைக்கழகத்தை தொடங்கி வைத்தார். மொத்தம் 800 ஏக்கர் பரப்பில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தற்போது 37 துறைகள், 15 பள்ளிகள் உள்ளது. 10 மையங்கள் மூலம் 175 முதுகலை, இளங்கலை ஆராய்ச்சி படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.

காரைக்கால், அந்தமான் நிகோபார் தீவில் பல்கலைக்கழகத்தின் துணை வளாகம் உள்ளது. 2 லட்சம் நூல்கள் கொண்ட நூலகம், 19 மாணவ–மாணவிகள் விடுதிகள், வைபை வசதி கொண்ட வளாகம், 400 பேராசிரியர்கள், விரிவுரையாளர், அலுவலர்கள், 6 ஆயிரத்து 100 மாணவர்கள் உள்ளனர். 87 இணைப்பு கல்லூரிகளில் 45 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்முறையாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் கடந்த தேசிய அளவிலான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் பொறியியல், மேலாண்மை, மருந்தியல் ஆகிய படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலும் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையும் வெளியானது. 100 சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது. இதில் புதுச்சேரி பல்கலைக்கழகம் 13–வது இடத்தை பிடித்துள்ளது. பெங்களூர் இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் சயின்ஸ், ஐ.ஐ.எஸ்.சி. முதலிடத்தை பெற்றுள்ளது. மத்திய மனித வளமேம்பாட்டு அமைச்சகத்தின் நேஷனல் இன்ஸ்ட்டியூசனல் ரேங்கிக் பிரேம்வொர்க் என்ற அமைப்பு உள்கட்டமைப்பு, நூலகம், ஆய்வக வசதிகள் உள்பட பல்வேறு சிறப்பம்சங்களை கணக்கில் கொண்டு இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

அனைத்து தரப்பினரும் இதை வரவேற்றுள்ளதால் அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

Similar News