தமிழ்நாடு

பகலில் ரெயிலில் சமோசா விற்று இரவில் திருடிய 17 வயது சிறுவன்

Published On 2023-05-26 10:51 GMT   |   Update On 2023-05-26 10:51 GMT
  • சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • விசாரணையில் அவர்கள் நடுக்குப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அவனது கூட்டாளி சத்ய பிரதீப் என்று தெரியவந்தது.

சென்னை:

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்தபடி 2 பேர் கஞ்சா புகைத்துக்கொண்டு இருந்தனர். அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். இதையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அங்குவைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் இருவரும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் நடுக்குப்பத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அவனது கூட்டாளி சத்ய பிரதீப் என்று தெரியவந்தது.

இதில் சிறுவன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும், சத்ய பிரதீப் அவனுக்கு உறுதுணையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

17 வயதான சிறுவன் பகல் நேரத்தில் ரெயிலில் சமோசா விற்று பிழைப்பு நடத்தி வந்தான். இரவு நேரத்தில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தான். திருட்டு சம்பவங்கள் மூலம் கிடைக்கும் பணத்தில் கஞ்சா புகைத்து ஆடம்பரமாக செலவழித்து வந்தான்.

அவர்கள் போலீசில் பிடிபடுவதற்கு முன்பு திருநின்றவூர் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடி விட்டு அதை விற்பனை செய்வதற்காக எழும்பூருக்கு கொண்டு வந்துள்ளனர். வரும் வழியில் பூந்தமல்லி, நசரத்பேட்டை பகுதிகளில் 3 இடங்களில் செல்போன் வழிப்பறி செய்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News