தமிழ்நாடு

வெயிலில் இருந்து தப்பிக்க குடை பிடித்து சென்ற பெண்களை காணலாம்.

ஈரோட்டில் 2-வது நாளாக 109 டிகிரி வெயில் பதிவு: இரவில் தூக்கத்தை இழந்து தவிக்கும் மக்கள்

Published On 2024-04-23 06:39 GMT   |   Update On 2024-04-23 06:46 GMT
  • கடந்த 20 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் திட்டத்தில் இருந்து வருகிறது.
  • முதியவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. ஒவ்வொரு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடித்து வருகிறது.

குறிப்பாக காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் முடிந்த அளவு கர்ப்பிணிகள், முதியவர்கள் வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த 20 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் திட்டத்தில் இருந்து வருகிறது. முதலில் 104 டிகிரி, அதன் பின்னர் 107 டிகிரி வரை வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

தொடர்ந்து இயல்பை விட 2 டிகிரி முதல் 5 டிகிரி வரை வெப்பம் கூடுதலாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன்படி கடந்த 19-ந் தேதி ஈரோட்டில் புதிய உச்சமாக 109 டிகிரி வெயில் கொளுத்தியது. தமிழகத்தில் வேறு எங்கும் பதிவாகாத அளவு இது.

இதைத்தொடர்ந்து நேற்றும் 2-வது முறையாக ஈரோட்டில் 109 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைத்து வருவதால் குழந்தைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

இதேப்போல் முதியவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. வீட்டை விட்டு வெளியே செல்லும் பெண்கள் குடை, முகத்தில் துணியால் மூடிக்கொண்டு வெளியே சென்று வருகின்றனர். பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை முக்கிய சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

வீட்டில் 24 மணி நேரமும் மின்விசிறி இயங்கினாலும் வெப்பம் காரணமாக புழுக்கம் நிலவி வருகிறது. இரவு நேரங்களில் வீட்டுக்குள் வெப்பம் இறங்குவதால் ஈரோடு மக்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தூக்கத்தை தொலைத்து திணறி வருகின்றனர்.

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்கள், கரும்பு சாறு, இளநீர், மோர், நுங்கு, தர்பூசணி ஆகியவற்றை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். இன்னும் இயல்பைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் ஈரோடு மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

Tags:    

Similar News