உலக கேரம் சாம்பியன் காசிமாவுக்கு ரூ. 1 கோடி - தமிழக அரசு அறிவிப்பு
- உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் காசிமா தங்கம் வென்றார்.
- குழு போட்டியில் பங்கேற்ற நாகஜோதி தங்கம் வென்றார்.
உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. இதில் தமிழக வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர். சமீபத்தில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்-க்கு தமிழக அரசு பரிசுத் தொகை அறிவித்து இருந்தது.
இந்த நிலையில், கேரம் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைகளுக்கு தமிழக அரசு எந்த ஊக்கத்தொகையும் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், கேரம் சாம்பியன் காசிமாவின் தந்தை தமிழக அரசு தனது மகளுக்கு ஊக்கத்தொகை அறிவிக்காததில் வருத்தம் இருப்பதாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், உலகக் கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 தங்கம் வென்ற காசிமாவுக்கு தமிழக அரசு ரூ. 1 கோடி ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. குழு போட்டியில் தங்கம் வென்ற நாகஜோதிக்கு ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இரட்டையர் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைகளுக்கும் ரூ. 50 லட்சம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.