வீழ்வேன் என்று நினைத்தாயோ.. சாம்பியன்ஸ் டிராபிக்கு ரெடியான ரச்சின் ரவீந்திரா
- முத்தரப்பு தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ரச்சின் ரவீந்திராவுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.
- கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் நாளை மோதுகின்றன.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) பாகிஸ்தான் மற்றும் துபாயில் நாளை முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெறுகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடக்கிறது.
இதில் களம் காணும் அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும். நாளை (புதன்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான முத்தரப்பு தொடரின் போது முகத்தில் காயமடைந்த நியூசிலாந்து அணியின் நட்சத்திர பேட்டர் ரச்சின் ரவீந்திரா காயத்தில் இருந்து மீண்டுள்ளார். இதன் காரணமாக அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளார். இது நியூசிலாந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாஃபி மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது ரச்சின் ரவீந்திராவுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இதில் பலத்த காயமுற்ற ரச்சின் ரவீந்திரா இரத்த காயத்துடன் களத்தில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து அவருக்கு சிகிச்சையில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.