கிரிக்கெட்டை பாகிஸ்தான் அழிக்கிறது.. நாங்களும் கைகுலுக்க மாட்டோம்- ஆப். முன்னாள் கேப்டன்
- பாகிஸ்தான் ஒரு கோழைத்தனமான செயலைச் செய்துள்ளது.
- இந்தியாவைப் போல நாங்களும் பாகிஸ்தான் உடன் கைகுலுக்க மாட்டோம்.
இஸ்லாமாபாத்:
கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் தலையீட்டால் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.
ஆனால் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென்று வான்வழித் தாக்குதலை நடத்தியது. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாக்டிகா மாகாணம் அர்குன், பர்மல் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஆப்கானிஸ்தானின் 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியானார்கள். 12 பேர் காயம் அடைந்தனர்.
இந்நிலையில் இந்தியாவைப் போல நாங்களும் பாகிஸ்தான் உடன் கைகுலுக்க மாட்டோம் என ஆப்கான் முன்னாள் கேப்டன் கரீம் சாதிக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எங்கள் குழந்தைகள் ஏழை வீடுகளிலிருந்து வருகிறார்கள். இங்குள்ள பெரும்பாலான மக்கள் ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே சாப்பிடுகிறார்கள். அவர்களைக் கொல்வதன் மூலம், பாகிஸ்தான் ஒரு கோழைத்தனமான செயலைச் செய்துள்ளது.
கிரிக்கெட் வீரர்கள் உலகை ஒன்றிணைக்க உழைக்கிறார்கள். ஆனால் பாகிஸ்தான், கிரிக்கெட்டையே அழிக்க விரும்புகிறது. இவை எதுவும் எங்களுடைய கிரிக்கெட்டை நிறுத்தாது. இந்தியாவைப் போல நாங்களும் பாகிஸ்தான் உடன் கைகுலுக்க மாட்டோம்.
என கூறினார்.