இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இரட்டை சதம் விளாசிய கருண் நாயர்
- கருண் நாயர் 204 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
- 2-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா ஏ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 533 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர் வரும் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்குகிறது. இங்கிலாந்து தொடருக்கு முன்பு இந்திய ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
அதன்படி இந்திய ஏ அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையேயான முதல் பயிற்சி போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 17 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 55 பந்தில் 24 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதன் மூலம் இந்திய ஏ அணி 51 ரன்கள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
இதனையடுத்து கருண் நாயர் மற்றும் சர்பராஸ் கான் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் கடந்தனர். சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட சர்பராஸ் கான் 92 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கருண் நாயர் சதம் அடித்து அசத்தினார்.
இதனையடுத்து கருண் நாயர் மற்றும் துருவ் ஜூரல் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. துருவ் ஜூரல் 94 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கருண் நாயர் இரட்டை சதம் விளாசினார். அவர் 204 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
2-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா ஏ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 533 ரன்கள் எடுத்துள்ளது.