கிரிக்கெட் (Cricket)

போராடும் குல்தீப்- வாஷிங்டன் சுந்தர்: உணவு இடைவேளை வரை 7 விக்கெட்டுகளை இழந்த இந்தியா

Published On 2025-11-24 14:03 IST   |   Update On 2025-11-24 14:03:00 IST
  • 8-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர்-குல்தீப் யாதவ் ஜோடி 50 பாட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர்.
  • மார்க்கோ யான்சென் 4 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.

கவுகாத்தி:

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.

தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 489 ரன் குவித்தது. செனுரன் முத்துசாமி அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவர் தனது முதல் டெஸ்ட் செஞ்சூரியை பதிவு செய்தார். முத்துசாமி 109 ரன்னும், மார்கோ யான்சென் 93 ரன்னும் எடுத்தனர். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 9 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 7 ரன்னுடனும், கே.எல்ராகுல் 2 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது . 480 ரன்கள் பின்தங்கி, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இந்தியா தொடர்ந்து விளையாடியது.

தென்ஆப்பிரிக்க வீரர்களின் அபார பந்து வீச்சால் இந்திய அணி விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 122 ரன் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.

கே.எல்.ராகுல் 22 ரன்களும், ஜெய்ஸ்வால் 58 ரன்னிலும், சாய்சுதர்சன் 15 ரன்னிலும், துருவ் ஜூரல் ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் ரிஷப் பண்ட் 7 ரன்னிலும், நிதிஷ்குமார் ரெட்டி 10 ரன்னிலும், ஜடேஜா 6 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். மார்க்கோ யான்சென் 4 விக்கெட்டையும், ஹார்மர் 2 விக்கெட்டையும், கேசவ் மகராஜ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.

இந்திய அணி 7 விக்கெட்டுக்களை இழந்ததால் பாலோஆன் நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. 8-வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தர்-குல்தீப் யாதவ் ஜோடி 50 பாட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர். இதனால் 3-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்தியா 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 315 ரன்கள் இந்தியா பின் தங்கியுள்ளது. குல்தீப் 14 ரன்களுடனும் வாஷிங்டன் சுந்தர் 33 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News