இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு
- இங்கிலாந்து -இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற 16-ந் தேதி நடக்கிறது.
- இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் மீண்டும் ஒருநாள் போட்டி அணிக்கு திரும்பி இருக்கிறார்.
மான்செஸ்டர்:
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றூம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரில் முதல் 3 ஆட்டங்கள் முடிவில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி இன்று நடக்கிறது. 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. இதனை தொடர்ந்து 16-ந் தேதி ஒருநாள் தொடர் தொடங்குகிறது. இந்த ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முந்தைய ஒருநாள் தொடரில் இடம் பெறாத இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சோபி எக்லெஸ்டோன் மீண்டும் ஒருநாள் போட்டி அணிக்கு திரும்பி இருக்கிறார். காயம் காரணமாக டி20 தொடரில் பாதியில் விலகிய கேப்டன் நாட் சிவெருக்கு பதிலாக சேர்க்கப்பட்ட மையா பவுச்சர் தனது இடத்தை தக்கவைத்துள்ளார்.
இங்கிலாந்து மகளிர் அணி விவரம்:
நாட் சிவெர் (கேப்டன்), எம். அர்லோட், சோபியா டங்லி, எம்மா லாம்ப், டாமி பிமோன்ட், அமி ஜோன்ஸ், மையா பவுச்சர், அலிஸ் கேப்சி, கேத் கிராஸ், அலிஸ் டேவிட்சன் ரிச்சர்ட்ஸ், சார்லி டீன், சோபி எக்லெஸ்டோன், லாரென் பைலர், லின்சே சுமித், லாரென் பெல்.