கிரிக்கெட் (Cricket)

பர்மிங்காம் டெஸ்ட்: இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து 77/3

Published On 2025-07-03 23:08 IST   |   Update On 2025-07-03 23:08:00 IST
  • இந்தியா முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
  • கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதமடித்து 269 ரன்கள் எடுத்தார்.

பர்மிங்காம்:

இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 85 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்னும், ஜடேஜா 41 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

இந்நிலையில், இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்த ஜோடி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டது. சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜடேஜா 89 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வாஷிங்டன் சுந்தர் கில்லுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் பொறுப்புடன் ஆடியது.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். வாஷிங்டன் சுந்தர் 41 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து ஆடிய சுப்மன் கில் 269 ரன்களில் வெளியேறினார்.

இறுதியில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து சார்பில் பஷீர் 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், ஜோஷ் டங் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இந்திய அணியின் ஆகாஷ் தீப் சிறப்பான தொடக்கம் கொடுத்தார்.

பென் டக்கெட், ஒல்லி போப் ஆகியோரை அடுத்தடுத்த பந்தில் வெளியேற்றினார். சிராஜ் கிராலியை அவுட்டாக்கினார். 25 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து இங்கிலாந்து தத்தளித்தது.

4வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் ஹாரி புரூக் சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடி மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டது.

இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 18 ரன்னும், ஹாரி புரூக் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

Tags:    

Similar News