விளையாட்டு
அரை இறுதியில் தமிழ்நாடு-இந்தியன் ரெயில்வே அணிகள் மோதிய காட்சி

தமிழக அணி 11-வது முறையாக சாம்பியன் பட்டம் பெறுமா? பஞ்சாப்புடன் இன்று இறுதிப்போட்டி

Published On 2022-04-10 06:02 GMT   |   Update On 2022-04-10 07:36 GMT
தேசிய சீனியர் கூடைப்பந்து அரை இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 93-70 என்ற புள்ளி கணக்கில் இந்தியன் ரெயில்வேயை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
சென்னை:

தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பில் 71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த அரை இறுதி ஆட்டத்தில் தமிழக அணி 93-70 என்ற புள்ளி கணக்கில் இந்தியன் ரெயில்வேயை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

தமிழ்நாடு அணியில் கேப்டன் முயின்பேக் 26 புள்ளியும், அரவிந்த், ஜீவானந்தம் தலா 15 புள்ளியும், அரவிந்த் குமார் 14 புள்ளியும் எடுத்தனர்.

தமிழக அணி இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் பஞ்சாபை எதிர்கொள்கிறது.

பஞ்சாபை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன் பட்டம் பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

தமிழக அணி இதுவரை 10 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. தற்போது 11-வது தடவையாக தேசிய சீனியர் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

தமிழக அணி முதல் சுற்று லீக்கில் டெல்லி, மிசோரம், உத்தரகாண்டையும், 2-வது சுற்று லீக்கில் அரியானா, ரெயில்வேயையும், கால் இறுதியில் கேரளாவையும் வீழ்த்தி இருந்தது. தோல்வி எதையும் சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

இதனால் சாம்பியன் பட்டத்தை வெல்ல தமிழ்நாடு-பஞ்சாப் இடையே கடும் போட்டி நிலவலாம். இரு அணிகளும் 6 முறை மோதியுள்ளன. இதில் தமிழ்நாடு 4-ல், பஞ்சாப் 2-ல் வெற்றி பெற்றுள்ளன.

தமிழகப் பெண்கள் அணி அரைஇறுதியில் ரெயில்வேயிடம் தோற்றது. மாலை 4 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியன் ரெயில்வே-தெலுங்கானா அணிகள் மோதுகின்றன. 
Tags:    

Similar News