விளையாட்டு
அவுட்ஸ்விங்: கபில் தேவ்வுடன் முகமது சமியை ஒப்பிட்ட ரவி சாஸ்திரி
முகமது சமியை நள்ளிரவில் எழுப்பி பந்து வீச சொன்னாலும் அற்புதமாக அவுட்ஸ்விங் வீசுவார் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 4-வது லீக் ஆட்டத்தில் குஜராத்-லக்னோ அணிகள் மோதின. இதில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக முகமது சமி தேர்வு செய்யப்பட்டார்.
அவர் முதல் பந்தில் கேஎல் ராகுலின் விக்கெட்டை கைப்பற்றினார். அந்த பந்து சிறப்பான அவுட்ஸ்விங் முறையில் வீசப்பட்டது. டி காக் மற்றும் மனிஸ் பாண்டே ஆகியோரது விக்கெட்டையும் முகமது சமி கைப்பற்றினார்.
இந்நிலையில் முகமது சமியை கபில் தேவ்வுடன் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஒப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
முகமது சமி மிகவும் உடற்தகுதியுடன் உள்ளார். அவரது கையில் இருந்து ஸ்விங் எளிதாக வருகிறது. முன்னாள் கேப்டன் கபில் தேவ்வை நள்ளிரவு 2 மணிக்கு எழுப்பி பந்து வீச சொன்னால் அவர் அருமையாக அவுட்ஸ்விங் வீசுவார். அது போலதான் முகமது சமியும். சமி உள்பட சில வீரர்களிடம் மட்டுமே இத்தகைய திறமை உள்ளது. அவரின் கையில் இருந்து சீம் வெளியிடும் விதம் சிறப்பாக இருக்கும்.
சமியை போல சீம் வெளியிடுவதில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சனும் ஒருவர். மும்பை மைதானம் அவரது பந்து வீச்சுக்கு இடம் கொடுப்பதால் அவர் பவர் பிளேயில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்...பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் நடுவராக இந்திய பெண் நியமனம்