விளையாட்டு
இந்திய பெண்கள் அணி

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை 107 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

Published On 2022-03-06 07:58 GMT   |   Update On 2022-03-06 07:58 GMT
இந்திய வீராங்கனை ராஜேஸ்வரி கெய்க்வாட் 4 விக்கெட் வீழ்த்த பாகிஸ்தான் வீராங்கனைகள் 43 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 137 ரன்னில் சுருண்டனர்.
நியூசிலாந்தில் நடைபெறும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி இந்திய வீராங்கனைகள் முதலில் பேட்டிங் செய்தனர். தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 75 பந்தில் 52 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தொடங்க வீராங்கனை ஷபாலி வர்மா டக்அவுட்டில் வெளியேறினார். 3-வது வீரராக களம் இறங்கிய தீப்தி ஷர்மா 40 ரன்கள் விளாசினார். கேப்டன் மிதாலி ராஜ் (9), ஹர்மன்ப்ரீத் கவுர் (5), ரிச்சா கோஷ் (1) அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்தியா ஒரு கட்டத்தில் 114 ரன்கள் சேர்ப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்தது.

7-வது விக்கெட்டுக்கு ஸ்னே ராணாவுடன், பூஜா வஸ்ட்ராகர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. பூஜா 59 பந்தில் 67 ரன்களும், ஸ்னே ராணா ஆட்டமிழக்கால் 48 பந்தில் 53 ரன்களும் சேர்க்க இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் குவித்தது. ஸ்னே- பூஜா ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் 245 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் வீராங்கனைகள் பேட்டிங் செய்தனர். இந்திய வீராங்கனைகள் சிறப்பாக பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் வீராங்கனைகள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 43 ஓவர்களில் 137 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் அனது. இதனால் 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர அணி அபார வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீராங்கனை ஷித்ர அமீன் அதிகபட்சமைாக 30 ரன்கள் சேர்த்தார். இந்திய வீராங்கனை ராஜேஸ்வரி கெய்க்வாட் 10 ஓவரில் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார். ஜுலான் கோஸ்வாமி, ஸ்னே ராணா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Tags:    

Similar News