விளையாட்டு
19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் - இந்தியா அபார வெற்றி
இந்திய வீரர் ராஜ் பாவா அதிரடியாக விளையாடி 14 பவுண்டரி, 8 சிக்சருடன் 162 ரன்களை குவித்து ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
டிரினிடாட்:
16 அணிகள் பங்கேற்றுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. பி பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இந்திய அணி புதுமுக அணியான உகாண்டாவுடன் மோதியது. டாஸ் வென்ற உகாண்டா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரகுவன்சி 144 ரன்களை குவித்தார். மற்றொரு வீரர் ராஜ் பாவா அதிரடியாக விளையாடி 14 பவுண்டரி, 8 சிக்சருடன் 162 ரன்களை குவித்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்களை குவித்தது.
இதையடுத்து 406 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி உகாண்டா அணி களமிறங்கி விளையாடியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர். கேப்டன் பஸ்கல் முருன்கி அதிகபட்சமாக 34 ரன்கள் எடுக்க, மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
முடிவில் உகாண்டா 19.4 ஓவர்களில் 79 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இதன் மூலம் இந்திய அணி 326 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் கேப்டன் நிஷாந்த் சிந்து அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். 162 ரன்கள் குவித்த ராஜ் பவா ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.