விளையாட்டு
பதவி விலக வேண்டாம் என விராட் கோலியை வலியுறுத்தினோம் - இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் பேட்டி
விராட் கோலியின் முடிவு டி20 உலகக்கோப்பை அணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என பிசிசிஐ கருதியதாக கூறினார்.
புதுடெல்லி:
டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீடித்து வருகிறது. விராட் கோலி பதவி விலகியதாக அறிவித்தவுடன், பிசிசிஐ-ல் இருந்து தன்னை யாரும் அழைத்து பேசவில்லை என கூறினார். ஆனால் பிசிசிஐ தலைவர் கங்குலி கூறுகையில், விராட் கோலியை தொடர்பு கொண்டு கேப்டன் பதவியில் நீடிக்க வலியுறுத்தினோம் என தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அணியின் தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா மவுனம் கலைத்துள்ளார். விராட் கோலியின் பதவி விலகல் குறித்து அவர் பேசியதாவது:-
டி20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக முடிவு எடுத்தது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தேர்வு கமிட்டியினர், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அனைவரும் அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கூறினோம்.
20 ஓவர் உலக கோப்பை போட்டி முடிந்த பிறகு அது பற்றி பேசிக்கொள்ளலாம் என்று கோலியிடம் கேட்டுக் கொண்டோம். அவரது முடிவு டி20 உலகக்கோப்பை அணியில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதினோம். இந்திய கிரிக்கெட்டிற்காக பதவி விலகாதீர்கள் என வலியுறுத்தினோம். ஆனால் அவர் தனது திட்டத்தில் உறுதியாக இருந்தார்.
இவ்வாறு சேத்தன் சர்மா தெரிவித்தார்.