விளையாட்டு
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இந்திய அணி

ஜூனியர் ஆசிய கோப்பை - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

Published On 2021-12-28 01:19 IST   |   Update On 2021-12-28 01:19:00 IST
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் ஹர்னூர் சிங், ரகுவன்ஷி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 104 ரன்களை சேர்த்தது.
துபாய்:

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா-ஆப்கானிஸ்தான்  அணிகள் மோதின. 

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் இஜாஸ் அகமது 86 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சுலைமான் சபி 73 ரன்னுடன் அவுட்டானார். 

இந்தியா சார்பில் ராஜ்வர்தன் , கௌஷல் தாம்பே , விக்கி  மற்றும் ராஜ் பாவா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஹர்னூர் சிங் - ரகுவன்ஷி ஜோடி பொறுப்புடன் விளையாடியது. ஹர்னூர் சிங் 65 ரன்களும் , ரகுவன்ஷி 35 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின், ஜோடி சேர்ந்த  ராஜ் பாவா, கௌஷல் தாம்பே  ஜோடி நிதானமாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில், இந்திய அணி 48.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 262 ரன்கள் அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு போட்டியில் பாகிஸ்தான் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

Similar News