செய்திகள்
மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி 197/2
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது.
கான்பூர்:
இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 111.1 ஓவர்களில் 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் அய்யர் அறிமுக டெஸ்ட்டிலேயே தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 105 ரன்கள் எடுத்த நிலையில் சவுதி பந்தில் வெளியேறினார். சுப்மன் கில் 52 ரன்களும், ஜடேஜா 50 ரன்களும், அஸ்வின் 38 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 57 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் வில் யங் 75 ரன்களுடனும், டாம் லாதம் 50 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் வில் யங் 89 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 18 ரன்களில் எல்.பி.டபில்யூ. முறையில் ஆட்டமிழந்தார். இன்று உணவு இடைவேளை வரை நியூசிலாந்து அணி 85.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்துள்ளது.