செய்திகள்
அரை சதமடித்த பாபர் அசாம்

ஆசிப் அலி அதிரடி - ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 3வது வெற்றியை ருசித்தது பாகிஸ்தான்

Published On 2021-10-29 23:12 IST   |   Update On 2021-10-29 23:12:00 IST
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதம் அடித்தார்.
துபாய்:

டி20 உலக கோப்பை தொடரில் இன்று துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பத்தில் தடுமாறியது. 76 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன்பின், கேப்டன் முகமது நபி, குல்பதின் நயிப் இருவரும் அதிரடியாக ஆடினர்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது. முகமது நபி, குல்பதின் நயிப் தலா 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரிஸ்வான் 8 ரன்னிலும், பகர் சமான் 30 ரன்னிலும், முகமது ஹபீஸ் 10 ரன்னிலும் அவுட்டாகினர்.

கேப்டன் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 51 ரன்னில் வெளியேறினார். ஷோயப் மாலிக் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் ஆசிப் அலி அதிரடியாக ஆடி ஒரே ஓவரில் 4 சிக்சர்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன்மூலம் பாகிஸ்தான் மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Similar News