செய்திகள்
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி- சவுரப் சவுத்ரி, மனு பாகெர் வெள்ளி வென்றனர்
குரோஷியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளது.
ஓசிஜெக்:
குரோஷியாவின் ஓசிஜெக் நகரில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற கலப்பு அணிகளுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
இறுதிச்சுற்றில் ரஷியாவும் இந்தியாவும் மோதின. இதில், இந்தியாவின் மனு பாகெர், சவுரப் சவுத்ரி ஜோடி 12-16 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்ததால், அவர்களுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
இதன்மூலம் நடப்பு உலகக் கோப்பை போட்டியில் இந்தியா இரண்டாவது பதக்கத்தை வென்றுள்ளது. முன்னதாக, பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய அணி வெண்கலம் வென்றது.
பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாழ்த்து தெரிவித்துள்ளது.