செய்திகள்
சாம்பியன் பட்டம் பெற்ற முல்தான் சுல்தான்ஸ் அணி

பாகிஸ்தான் சூப்பர் லீக் - பெஷாவரை வீழ்த்தி முல்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது

Published On 2021-06-24 21:16 GMT   |   Update On 2021-06-25 15:11 GMT
பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது.
அபுதாபி:

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆண்டுதோறும் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. கொரோனா தொற்று தாக்கம் இருந்த நிலையில் 2021 சீசன் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது.

பயோ-பபுள் தோல்வியடைந்து வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. 
அதன்பின் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தீர்மானித்தது. கடந்த 9-ம் தேதி முதல் இப்போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் மொகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ், வஹாப் ரியாஸ் தலைமையிலான பெஷாவர் சல்மி அணிகள் மோதின. டாஸ் வென்ற பெஷாவர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி, முதலில் பேட் செய்த முல்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் குவித்தது. ஷோயப் மக்சூத் 35 பந்துகளில் 3 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 60 ரன்கள் எடுத்தார். அதிரடியாக ஆடிய 
ரசோவ் 21 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 50 ரன்கள் எடுத்தார். 

பெஷாவர் அணி சார்பில் சமீன் குல், மொகமது இம்ரான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெஷாவர் அணி களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் பெஷாவர் அணி 9 விக்கெட்டுக்கு 159 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.



பெஷாவர் அணியில் அதிகபட்சமாக ஷோயப் மாலிக் 48 ரன்னும், கம்ரான் அக்மல் 36 ரன்னும் ரோவான் பாவெல் 23 ரன்னும் எடுத்தனர்.

முல்தான் அணி சார்பில் தாஹிர் 3 விக்கெட்டும், இம்ரான் கான், முசாராபானி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் முல்தான் சுல்தான்ஸ் அணி முதல் முறையாக பாகிஸ்தான் சூப்பர் லீக் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 

ஷோயப் மக்சூத் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வென்றார்.
Tags:    

Similar News