செய்திகள்
செல்சியா 2-வது முறையாக சாம்பியன்

ஐரோப்பிய சாம்பியன் ‘லீக்’ கால்பந்து - செல்சியா 2-வது முறையாக சாம்பியன்

Published On 2021-05-30 08:52 GMT   |   Update On 2021-05-30 08:52 GMT
லண்டனில் உள்ள செல்சியா கிளப் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை 2-வது முறையாக கைப்பற்றி உள்ளது.

போர்ட்டோ:

2020-2021 ம் ஆண்டுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் 32 அணிகள் பங்கேற்று விளையாடின.

இதன் இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்தில் உள்ள செல்சியா, மான்செஸ்டர் சிட்டி அணிகள் தகுதி பெற்று இருந்தன. செல்சியா அணி ரியல் மாட்ரீட் அணியையும், மான்செஸ்டர் சிட்டி பி.எஸ். ஜி. அணியையும் தோற்கடித்து இருந்தன.

செல்சியா-மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதிய ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி போர்ச்சுக்கல் நாட்டில் உள்ள போர்ட்டோ நகரில் இந்திய நேரப்படி நள்ளிரவில் நடந்தது.

இதில் செல்சியா 1-0 என்ற கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

முதல் பாதி ஆட்டம் முடிய 3 நிமிடங்கள் இருந்த போது செல்சியா கோல் அடித்தது. அந்த அணிக்காக ஹைஹவெர்ட்ஸ் 42-வது நிமிடத்தில் இந்த கோலை அடித்தார். முதல் பாதி முடியும் போது செல்சியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

2-வது பாதி ஆட்டத்தில் பதில் கோல் அடித்து சமன் செய்ய மான்செஸ்டர் சிட்டி அணி கடுமையாக போராடியது. ஆனால் முடியவில்லை. இதேபோல செல்சியா அணியாலும் மேலும் கோல் போட முடியவில்லை. இறுதியில் செல்சியா 1-0 என்ற கணக்கில் மான்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது.

லண்டனில் உள்ள செல்சியா கிளப் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை 2-வது முறையாக கைப்பற்றி உள்ளது. இதற்கு முன்பு 2012-ம் ஆண்டு அந்த அணி வெற்றிபெற்று இருந்தது.

சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டியில் செல்சியா 4-வது இடத்தை பிடித்து இருந்தது. தற்போது மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை பெற்றது.

Tags:    

Similar News