செய்திகள்
சதமடித்த குசால் பெராரா

3வது போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை - ஒருநாள் தொடரை கைப்பற்றியது வங்காளதேசம்

Published On 2021-05-28 19:49 GMT   |   Update On 2021-05-28 19:49 GMT
டாக்காவில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் வங்காளதேசத்தை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெற்றது.
டாக்கா:

வங்காளதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரும் , கேப்டனுமான குசால் பெராரா பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவர்120 ரன்னில் அவுட்டானார். தனஞ்செயா டி சில்வா 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். குணதிலகா 39 ரன்னில் வெளியேறினார்.

வங்காளதேசம் அணி சார்பில் தஸ்கின் அஹமது 4 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.



இதையடுத்து, 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி களமிறங்கியது. இலங்கை அணியினரின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியவில்லை.

இதனால் வங்காளதேசம் அணி 42.3 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் மஹமதுல்லா 53 ரன்னும், மொசாடெக் ஹுசைன் 51 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் இலங்கை அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பில் துஷ்மந்தா சமீரா 5 விக்கெட்டும், வனிந்து ஹசரங்கா, ரமேஷ் மெண்டிஸ் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆட்ட நாயகன் விருது துஷ்மந்தா சமீராவுக்கும், தொடர் நாயகன் விருது முஷ்பிகுர் ரஹிமுக்கும் வழங்கப்பட்டது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வங்காளதேசம் 2-1 என கைப்பற்றி அசத்தியுள்ளது.
Tags:    

Similar News