3-வது டெஸ்டில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும்- கவாஸ்கர் சொல்கிறார்
மெல்போர்ன்:
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதும் டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. 3-வது டெஸ்ட் போட்டி சிட்னியில் வருகிற 7-ந் தேதி தொடங்குகிறது.
சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் காயமடைந்த ரோகித் சர்மாஅதிலிருந்து மீண்டார். இதையடுத்து ஆஸ்திரேலியா சென்ற அவர் கொரோனா நெறிமுறை காரணமாக சிட்னியில் 2 வாரம் தனிமைப்படுத்திக் கொண்டார்.
2 வார தனிமைக்கு பிறகு அவர் மெல்போர்ன் சென்று இந்திய அணியுடன் இணைந்தார். அங்கு அவர் பயிற்சியை தொடங்க உள்ளார்.
இதற்கிடையே ரோகித் சர்மா 3-வது டெஸ்டில் விளையாடுவாரா? என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் தெரியவில்லை. முதல் டெஸ்ட் போட்டியில் சொதப்பிய தொடக்க வீரர் பிரித்விஷாவுக்கு பதிலாக 2-வது டெஸ்டில் சுப்மன்கில் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால் 3-வது டெஸ்டிலும் சுப்மன்கில்லை தொடக்க வீரராக களம் இறக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதற்கிடையே அணியில்ரோகித் சர்மா இணைந்திருப்பதால், 3-வது டெஸ்டில் இந்திய அணி பேட்டிங் வரிசையில் மாற்றம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சிட்னியில் நடக்கும் 3-வது டெஸ்டில் ரோகித் சர்மாவை தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
அணியில் மயங்க் அகர்வாலை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். அவர் சரியாக விளையாடவில்லை என்று எனக்கு தெரியும். ஆனால் அவர் ஒரு தரமான வீரர். ஒவ்வொரு வீரருக்கும் சறுக்கல்கள் ஏற்படத்தான் செய்யும். எனவே அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்க வேண்டும். ரோகித் சர்மாவும், மயங்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
டாப் ஆர்டரில் சுப்மன்கில் சிறப்பாக விளையாடி இருந்தாலும், அவரை 5-வது வீரராக களம் இறக்க வேண்டும் அது அவரது நிலையான இடமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
சுப்மன்கில் 5-வது வீரராக களம் இறக்கப்பட்டால், விகாரி நீக்கப்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.