செய்திகள்
அற்புதமாக பந்து வீசிய இந்திய வீரர்களுக்கு விராட் கோலி பாராட்டு
மெல்போர்ன் டெஸ்டில் அற்புதமாக பந்து வீசி ஆஸ்திரேலியாவை 195 ரன்னில் சுருட்டுவதற்கு காரணமாக இருந்த பந்து வீச்சாளர்களை விராட் கோலி பாராட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் இன்று மெல்போர்னில் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. பும்ரா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்தியாவின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. அடிலெய்டு படுதோல்வி குறித்து கவலை அடையாமல் புதுநம்பிக்கையுடன் விளையாடினர். அறிமுகமான முகமது சிராஜ் 2-வது செசனில் அற்புதமாக பந்து வீசினார்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் அஸ்வின் முன்னதாகவே பந்து வீச அழைக்கப்பட்டார். அவர் மேத்யூ வடே, ஸ்மித் ஆகியோரை வீழ்த்தி அடித்தளம் அமைத்து கொடுத்தார்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி சொந்த நாடு திரும்பியுள்ளார். அவர் பந்து வீச்சாளர்களை பாராட்டியுள்ளார். விராட் கோலி டுவிட்டர் பக்கத்தில் ‘‘முதல் நாள் நமக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. பந்து வீச்சாளர்களிடம் இருந்து சிறந்த காட்சி வெளியானது. திடமாக முடித்துவிட்டனர்’’ என்றார்.
Top day 1 for us. Great display from the bowlers and a solid finish too. 🇮🇳👏
— Virat Kohli (@imVkohli) December 26, 2020