செய்திகள்
வீராட் கோலி

மனைவிக்கு குழந்தை பிறப்பதால் ஆஸ்திரேலியாவில் இருந்து கோலி இந்தியாவுக்கு புறப்பட்டார்

Published On 2020-12-23 09:56 GMT   |   Update On 2020-12-23 09:56 GMT
இந்திய அணி கேப்டன் வீராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளதால் அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார்.

சிட்னி:

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவிளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 4 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா தோற்றது. 2-வது இன்னிங்சில் வெறும் 36 ரன்னில் சுருண்டது.

2-வது டெஸ்ட் போட்டி வருகிற 26-ந் தேதி மெல்போர்ன் நகரில் தொடங்குகிறது. இதற்கிடையே இந்திய அணி கேப்டன் வீராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது. இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு கோலி நாடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி வீராட் கோலி ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்பாக கோலி, அணி வீரர்களுடன் ஆலோசனை நடத்தி பேசி உள்ளார். அப்போது உத்வேகத்துடன் விளையாடுங்கள் என்று ஊக்கப்படுத்தினார்.

இதுகுறித்து அணி நிர்வாக வட்டாரங்கள் கூறும்போது, “வீராட் கோலிஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு புறப்பட்டார். அதற்கு முன்பாக அவர் அனைத்து வீரர்களுடன் பேசினார்.

அவர்களுக்கு நம்பிக்கையை உயர்த்துவதோடு நேர்மாறாக இருக்க யோசனைகளை வழங்கினார். கேப்டன் பொறுப்பை ரகானேவிடம் வழங்கி விட்டு, ஆடுகளத்தில் வீரர்கள் தங்களை வெளிப்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஊக்கம் அளித்தார்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள ரோகித் சர்மா சிட்னி நகரில் கொரோனா நெறிமுறை காரணமாக அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் அவர் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது.

ரோகித் சர்மா வருகிற ஜனவரி 3-ந் தேதி தனது பயிற்சியை தொடங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3-வதுடெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ந் தேதி, 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் 15-ந் தேதி பிரிஸ்பேனிலும் தொடங்குகிறது.

Tags:    

Similar News