செய்திகள்
ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் உடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள தயாராகும் சிஎஸ்கே

Published On 2020-10-02 12:05 GMT   |   Update On 2020-10-02 12:07 GMT
சொந்த காரணத்திற்காக ஐபிஎல் 13-வது சீசனில் இருந்து ரெய்னா, ஹர்பஜன் சிங் விலகிய நிலையில், இருவரின் ஒப்பந்த உறவை முறித்துக் கொள்ள சிஎஸ்கே முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் 13-வது கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக ரெய்னா அணியுடன் சென்றிருந்தார். வீரர்கள் கோரன்டைனில் இருந்தபோது, சொந்த காரணத்திற்கான இந்தியா திரும்பினார். அதன்பின் ஒட்டுமொத்த தொடரிலும் இருந்து விலகினார். ஹர்பஜன் சிங் ஐக்கிய அரபு அமீரகம் செல்லவில்லை. இவரும் விலகுவதாக தெரிவித்தார்.

டோனிக்கும், சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரெய்னா விலகியதாக கூறப்பட்டது. அணி உரிமையாளர் ஸ்ரீனிவாசன் ரெய்னா குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இருவரையும் 2018-ல் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்திருந்தது. ரெய்னாவுக்கு 11 கோடி ரூபாய் சம்பளமும், ஹர்பஜன் சிங்கிற்கு 2 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. ஐபிஎல் விதிப்படி இந்த சீசனுடன் 3 வருட ஒப்பந்தம் முடிவடைகிறது.

இந்நிலையில் இருவரின் ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் முறித்து கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அந்த அணியின் சிஇஓ-விடம் கேட்டபோது, அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். ஆனால் இந்த செய்தியை மறுக்கவில்லை. சென்னை அணி இருவரையும் வெளியேற்றினால், ஐபிஎல் ஏலத்தில் மற்ற அணிகள் ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது.

ஆனால் அடுத்த வருடத்திற்கான ஏலம் நடைபெறுமா? என்பது கேள்விக்குறியே. 6 மாத கால இடைவெளி இருக்க வேண்டும். இந்த நடைமுறை பின்பற்றபட்டால் அடுத்த ஐபிஎல் தொடர் பங்கேற்பது சந்தேகம்தான்.
Tags:    

Similar News