செய்திகள்
கிஷன் பந்தை விளாசும் காட்சி

ஐபிஎல் 2020: இஷான் கிஷன், பொல்லாட் அதிரடி - பெங்களூர், மும்பை போட்டி ‘டை’ ஆனது - சூப்பர் ஓவரில் வெற்றி யாருக்கு?

Published On 2020-09-28 18:03 GMT   |   Update On 2020-09-28 18:38 GMT
ஐபிஎல் கிரிக்கெட்டின் பெங்களூர் - மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி ’டை’யில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட உள்ளது.
துபாய்:

ஐபிஎல் தொடரின் 10-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் -  மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆரோன் பிஞ்ச் - தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தேவ்தத் படிக்கல் நிதானமாக விளையாட, ஆரோன் பிஞ்ச் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

இதனால் பவர் பிளே-யான முதல் ஆறு ஓவரில் ஆர்சிபி விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் விளாசியது.

8-வது ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஆரோன் பிஞ்ச் 31 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 9-வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். 

அவர் 35 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 52 ரன்கள் அடித்தார்.
அப்போது ஆர்சிபி 1 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். விராட் கோலி பந்தை எதிர்கொள்ள மிகவும் திணறினார். அவர் 11 பந்தில் 3 ரன்கள் எடுத்த நிலையில் ஏமாற்றம் அளித்தார்.

தேவ்தத் படிக்கல் - விராட் கோலி ஜோடி 20 பந்தில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் வெறும் 11 ரன்கள் மட்டுமே அடித்தது. அடுத்து டி வில்லியர்ஸ் களம் இறங்கினார். அதன்பின் படிக்கல் ஆட்டத்தில் வேகம் பிடித்தது.

பேட்டின்சன் வீசிய 14-வது ஓவரில் இரண்டு சிக்சர் விளாசினார் படிக்கல். 17-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி படிக்கல் 38 பந்தில் அரைசதம் அடித்தார்.  தொடர்ந்து விளையாடிய அவர், 40 பந்தில் 54 ரன்கள் எடுத்து போல்ட் பந்தில் ஆட்டமிழந்தார்.

மறுபக்கம் டி வில்லியர்ஸ் மும்பை பந்து வீச்சை புரட்டி எடுத்தார். 19-வது ஓவரின் கடைசி பந்தை சிக்சருக்கு விரட்டி டி வில்லியர்ஸ் 23 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் கடந்தார்.

கடைசி ஓவரில் ஷவம் டுபே இரண்டு சிக்ஸ் விளாசி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்தது. 
டி வில்லியர்ஸ் 24 பந்தில் 55 ரன்களுடனும், ஷிவம் டுபே 10 ஓவரில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

மும்பை தரப்பில் டிரண்ட் போல்ட் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மும்பை அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் குயின்டன் டிகாக் களமிறங்கினர். 

8 பந்துகளை சந்தித்து ஒரு சிக்சர் உள்பட 8 ரன்கள் எடுத்திருந்த ரோகித் சர்மா வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த சூர்ய குமார் யாதவ் 2 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

தொடக்க வீரரான டிக்காக்கும் 14 ரன்னில் வெளியேறினார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 6.4 ஓவரில் 39 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பாண்ட்யா 15 ரன்னில் வெளியேறினார். பின்னர் வந்த பொல்லார்ட் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்து பெங்களூர் வீரர்களின் பந்து வீச்சை புரட்டி எடுத்தார். 

சிறப்பாக ஆடிய இஷான் கிஷன் 58 பந்துகளில் 2 பவுண்டரிகள், 9 சிக்சர்கள் உள்பட 99 ரன்கள் குவித்து உடானா பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.

கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் உடானா வீசிய பந்தை பொல்லார்ட் பவுண்டரிக்கு விளாசினார். இதனால், மும்பை அணி 201 ரன்களை எடுத்தது. இதனால் இரு அணிகளில் ஸ்கோரும் சமன் ஆனது. தற்போது சூப்பர் ஓவர் நடைபெற உள்ளது. 
Tags:    

Similar News