செய்திகள்
பாபர் அசாம்

முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட முடிவில் 139/2- பாபர் அசாம் அரைசதம்

Published On 2020-08-05 17:46 GMT   |   Update On 2020-08-05 17:46 GMT
பாபர் அசாம், ஷான் மசூத் சிறப்பாக விளையாட, மழை தடைபோட பாகிஸ்தான் முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

ஷான் மசூட், அபித் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபித் அலி 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து கேப்டன் அசார் அலி களம் இறங்கினார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். அப்போது பாகிஸ்தான் 43 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

3-வது விக்கெட்டுக்கு ஷான் மசூட் உடன் இளம் நட்சத்திர வீரர் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். களம் இறங்கியதும் பாபர் அசாம் சற்று தடுமாறினார். 15-வது பந்தில் முதல் ரன் கணக்கை தொடங்கினார். அதன்பின் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 70-வது பந்தில் அரைசதம் தொட்டார். கடைசி 56 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார்.



மறுமுனையில் ஷான் மசூத்தும் அரைசதம் நோக்கி நகர்ந்தார். பாகிஸ்தான் 49 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. பாபர் அசாம் 69 ரன்களுடனும், ஷான் மசூத் 46 ரன்களுடனும் களத்தில் உள்ளது. மழை குறுக்கிட்டதால் ஆட்டத்தின் பெரும்பகுதி தடைபட்டது.
Tags:    

Similar News