செய்திகள்
டேவிட் வார்னர், ஸ்மித்

ஐபிஎல் 2020: முதல் வாரத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்கமாட்டார்கள்

Published On 2020-07-27 11:30 GMT   |   Update On 2020-07-27 11:30 GMT
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2020 சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுமதி வழங்கியதும், அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணை வெளியிடப்படும்.

இங்கிலாந்து பாகிஸ்தானுடன் டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இந்தத் தொடர் முடிந்த உடன் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு திரும்ப இருந்தனர்.

இந்நிலையில்தான் இங்கிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. இந்தத் தொடர் செப்டம்பர் 16-ந்தேதி முடிவடைகிறது.

ஐபிஎல் 19-ந்தேதி தொடங்குகிறது. மூன்று நாட்களுக்குள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வீரர்கள் வந்து விடுவார்கள். தற்போது கொரோனா வைரஸ் காலம் என்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

அவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் வந்த உடன் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். நெகட்டிவ் என வந்தால் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் அந்தந்த அணியில் இணைவார்கள். இதற்கு குறைந்தது 10 நாட்கள் ஆகும்.

இதனால் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஸ்மித், கம்மின்ஸ் போன்ற வீரர்களும், இங்கிலாந்தின் பட்லர், பேர்ஸ்டோவ், ஆர்சர் போன்ற வீரர்களும் முதல் வார போட்டிகளில் இடம் பெற வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
Tags:    

Similar News