செய்திகள்
ஹர்திக் பாண்ட்யா

55 பந்தில் 158 ரன்கள் குவித்த ஹர்திக் பாண்டியா: இத்தனை சிக்சரா?

Published On 2020-03-06 09:57 GMT   |   Update On 2020-03-06 09:57 GMT
டி.ஒய். பாட்டீல் 20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா 39 பந்தில் சதம் விளாசியதோடு, ஆட்டமிழக்காமல் 158 ரன்கள் குவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக இருந்தவர் ஹர்திக் பாண்ட்யா. இவர் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு லண்டனில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதனால் சுமார் ஐந்து மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்தார்.

இந்நிலையில் டாக்டர் டி.ஒய். பாட்டீல் டி20  கோப்பைக்கான தொடரில் களம் இறங்கினார். ஹர்திக் பாண்ட்யா ரிலையன்ஸ்-1 அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த 3-ந்தேதி ரிலையன்ஸ்-1 அணி சிஏஜி அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில்  ஹர்திக் பாண்ட்யா 37 பந்தில் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 39 பந்தில் 105 ரன்கள் அடிக்க ரிலையன்ஸ்-1 20 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் குவிததது. 105 ரன்னில் 10 சிக்ஸ் மற்றும் எட்டு பவுண்டரிகள் அடங்கும். அத்துடன் ஐந்து விக்கெட்டுகளும் கைப்பற்றினார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதியில் ரிலையன்ஸ்-1 சூர்யகுமார் யாதவ் தலைமையிலான பிபிசிஎல் அணியை எதிர்கொண்டது. இதில் ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 55 பந்தில்  158 ரன்கள் குவித்தார். இதில் 20 சிக்சர்கள் விளாசினார். அத்துடன் ஆறு பவுண்டரிகளும் அடித்தார். 39 பந்தில் சதம் அடித்த அவர், கடைசி 16 பந்தில் 58 ரன்கள் விளாசினார்.

இந்த அதிரடி மூலம் உடற்தகுதி பெற்று மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்ப தயாராக இருக்கிறேன் என்பதை தேர்வு குழுவுக்கு சூசகமாக தெரிவித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஹர்திக் பாண்ட்யா உள்ளார்.

ஹர்திக் பாண்ட்யா காயத்திற்குப்பின் சிறப்பாக விளையாடி வருவது மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
Tags:    

Similar News