செய்திகள்
சதம் அடித்த சவுராஷ்டிர வீரர் ஷெல்டன் ஜாக்சன்

ரஞ்சி டிராபி அரையிறுதி: குஜராத்துக்கு 327 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சவுராஷ்டிரா

Published On 2020-03-03 18:40 IST   |   Update On 2020-03-03 18:40:00 IST
ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி அரையிறுதியில் குஜாராத் அணியின் வெற்றிக்கு 327 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சவுராஷ்டிரா.
ரஞ்சி டிராபியின் முதல் அரையிறுதி போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. சவுராஷ்டிரா அணிக்கெதிராக குஜராத் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய சவுராஷ்டிரா ஷெல்டன் ஜாக்சனின் (103) சதத்தால் முதல் இன்னிங்சில் 304 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய குஜராத் 252 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ருஜுல் பாட் அதிகபட்சமாக 71 ரன்கள் சேர்த்தார். சவுராஷ்டிரா அணியின் உனத்கட் 3 விக்கெட்டும் சகாரியா, ஜானி மற்றும் ஜடேஜா ஆகியோர் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

52 ரன்கள் முன்னிலையுடன் சவுராஷ்டிரா 2-வது இன்னிங்சில் விளையாடியது. இந்த இன்னிங்சில் சவுரடிஷ்டிரா அணி விரைவாக ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. 15 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சகாரியா, வாசவதா அணியை சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் சவுராஷ்டிரா 5 விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்திருந்தது. சகாரியா 32 ரன்களுடனும், வாசவதா 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்றது. சகாரியா 45 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜானி களம் இறங்கினார். வாசவதா - ஜானி ஜோடி சிறப்பாக விளையாடியது. ஜானி 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். வாசவதா சிறப்பாக விளையாடி 139 ரன்கள் குவித்தார். இவரது சிறப்பான ஆட்டத்தால் சவுராஷ்டிரா 2-வது இன்னிங்சில் 274 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

முதல் இன்னிங்சில் 52 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் குஜராத் அணிக்கு 327 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

327 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் பன்சால் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். குஜராத் 1 விக்கெட் இழப்பிற்கு 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்றைய 4-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

நாளை குஜராத் அணி 320 ரன்களை எட்டினால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும். போட்டி டிராவில் முடிந்தால் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற அணி என்ற வகையில் சவுராஷ்டிரா இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். 

Similar News