செய்திகள்
அபிமன்யு மிதுன்

ஒரே ஓவரில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி கர்நாடகா வீரர் சாதனை

Published On 2019-11-29 13:55 GMT   |   Update On 2019-11-29 13:55 GMT
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில் அரியானா அணிக்கெதிராக கர்நாடகா வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுன் ஒரே ஒவரில் ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார்.
சையத் முஷ்டாக் அலி டிராபி டி20 தொடரில் அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்றன. முதல் போட்டியில் அரியானா - கர்நாடகா அணிகள் மோதின.

அரியானா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் எளிதாக 200 ரன்னைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி ஓவரை அபிமன்யு மிதுன் அபாரமாக வீச இரண்டு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

முதல் நான்கு பந்துகளில் தொடர்ச்சியாக நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப் படைத்தார். இதற்கு இலங்கை வீரர் லசித் மலிங்கா நியூசிலாந்துக்கு எதிராக தொடர்ந்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார் சாதனைப் படைத்திருந்தார்.

மிதுன் ஐந்தாவது பந்தை வைடாக வீசினார். அதற்குப் பதிலாக வீசிய பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்தார். அடுத்த பந்தில் விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஒரே ஓவரில் ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றி சாதனைப் படைத்தார். முதல் மூன்று ஓவர்களில் விக்கெட் ஏதுமின்றி 37 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News