செய்திகள்
டு பிளிசிஸ்

ஸ்டெயின், டி வில்லியர்ஸ், அம்லா இடங்களை ஒரே நாள் இரவில் நிரப்பி விட முடியாது: பிளிஸ்சிஸ்

Published On 2019-10-14 10:57 GMT   |   Update On 2019-10-14 10:57 GMT
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வியை சந்தித்த தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ், அனுபவம் இல்லாததால் தடுமாறுகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
புனே டெஸ்டில் படுதோல்வி அடைந்த பிறகு தென்ஆப்பிரிக்க கேப்டன் டு பிளிசிஸ் கூறுகையில், ‘‘இந்திய துணை கண்டத்தில் விளையாடும்போது, முதல் இன்னிங்சில் பெரிய ஸ்கோர் குவிக்க வேண்டியது முக்கியம் என்பதை அறிவோம். அப்போதுதான் வெற்றி வாய்ப்பை பெற முடியும்.

இந்த டெஸ்டில் நாங்கள் நன்றாக ஆடவில்லை. அடுத்த டெஸ்டில் முன்னேற்றம் காண முயற்சிப்போம். விராட் கோலியின் பேட்டிங் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. இந்த தொடரை வெல்வதற்கு இந்தியா தகுதியான அணி.

உலகின் சிறந்த அணி என்றால், நிறைய அனுபவம் இருக்க வேண்டும். இப்போது நாங்கள் கிட்டத்தட்ட எல்லா அனுபவத்தையும் இழந்து விட்டோம். அனுபவம் வாய்ந்த ஸ்டெயின், மோர்னே மோர்கல், அம்லா, டி வில்லியர்ஸ் ஆகியோர் ஓய்வு பெற்று விட்டனர்.

அவர்களது இடத்தை ஒரே நாள் இரவில் நிரப்பி விட முடியாது. இப்போது அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் குறைந்த எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில்தான் விளையாடி உள்ளனர். அவர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள காலம் பிடிக்கும். அணியில் உள்ள சிறந்த வீரர்கள் வெளியேறும்போது, எந்த அணியும் இது போன்ற சவாலை (தடுமாற்றத்தை) சந்தித்துதான் ஆக வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News