செய்திகள்

முத்தரப்பு டி20 இறுதிப் போட்டி- பாகிஸ்தானுக்கு 184 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரலியா

Published On 2018-07-08 09:40 GMT   |   Update On 2018-07-08 09:40 GMT
முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றிக்கு 184 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா. #AUSvPAK
ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. இன்று நடைபெற்று வரும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி ஆர்கி ஷார்ட், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் பவர்பிளே-யான முதல் 6 ஓவரில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் குவித்தது.



இந்த ஜோடி 9.5 ஓவரில் 95 ரன்னாக இருக்கும்போது ஆரோன் பிஞ்ச் ஆட்டமிழந்தார். அவர் 27 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 47 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த மேக்ஸ்வெல் (5), மார்கஸ் ஸ்டாய்னிஸ் (12) கேரி (2) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.இதனால் ஸ்கோர் உயர்வில் சற்று மந்தநிலை ஏற்பட்டது. மற்றொரு தொடக்க வீரரான ஆர்கி ஷார்ட் 53 பந்தில் 76 ரன்கள் விளாசியதால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 160 ரன்களை தாண்டிச் சென்றது.

டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 11 பந்தில் 19 ரன்கள் சேர்க்க ஆஸ்திரேலியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. இதனால் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 184 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.
Tags:    

Similar News