செய்திகள்
ரஷித் கான் கிரிக்கெட் உலகிற்கு கிடைத்த சொத்து - ஆப்கானிஸ்தான் அதிபர் பாராட்டு
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, ரஷித் கான் கிரிக்கெட் உலகிற்கு கிடைத்த சொத்து என பாராட்டு தெரிவித்துள்ளார். #RashidKhan #AshrafGhani SunRisersHyderabad
காபுல்:
ஆப்கானிஸ்தானை சேர்ந்த சுழற்பந்து வீரர் ரஷீத்கான். ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணிக்காக ஆடி வருகிறார். நேற்று நடைபெற்ற இரண்டாவது பிளே-ஆப் போட்டியில் அவர் சிறப்பாக பந்துவீசியதோடு, அதிரடியாக பேட்டிங்கும் செய்தார்.
அதிரடியாக பேட்டிங் செய்த அவர் 10 பந்துகளில் 34 ரன்கள் அடித்தார். இதில் 2 பவுண்டரிகளும், 4 சிக்ஸர்களும் அடங்கும். தொடர்ந்து பந்துவீசிய அவர் 4 ஓவரிகளில் 19 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்கள் வீழ்த்தினார். அதோடு இரண்டு கேட்ச் மற்றும் ஒரு ரன் அவுட் மூலம் விக்கெட்கள் விழவும் காரணமாக இருந்தார். இதனால் தான் ஒரு பந்துவீச்சாளர் மட்டுமல்ல, சிறந்த ஆல்-ரவுண்டர் என்பதை ரஷித் கான் நிரூபித்து விட்டார் என பலரும் கூறி வருகின்றனர்.
ஐபிஎல் போட்டிகளில் அவர் இதுவரை 21 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். 20 ஓவர் போட்டிகளை பொருத்தவரை ரஷித் கான், உலகின் சிறந்த சுழற்பந்து வீரர் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.
இந்நிலையில், அப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, ரஷித் கானுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியதாவது:-
நமது கதாநாயகனான ரஷித் கானினால், ஆப்கானிஸ்தான் முழு பெருமை கொள்கிறது. எங்கள் வீரர்களை தங்கள் திறமையை காட்ட ஒரு தளத்தை வழங்கிய எங்கள் இந்திய நண்பர்களுக்கு நன்றியுடன் இருக்கிறேன். ஆப்கானிஸ்தானின் சிறப்பு என்ன என்பதை ரஷித் நமக்கு நினைவூட்டுகிறார். அவர் கிரிக்கெட் உலகிற்கு ஒரு சொத்தாகவே இருக்கிறார். நாம் அவரை விட்டு கொடுக்க போவதில்லை.
இவ்வாறு அஷ்ரப் கானி கூறியுள்ளார்.#AshrafGhani #RashidKhan #Afghanistanspinner SunRisersHyderabad