செய்திகள்
முதன்முறையாக 600 ரன்களை கடந்து ஆரஞ்சு கேப்பை கைப்பற்றினார் லோகேஷ் ராகுல்
பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் இந்த சீசனில் முதல் வீரராக 600 ரன்களை கடந்து ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்தியுள்ளார். #KingsXIPunjab #KLRahul #VIVOIPL #IPL2018
மும்பை:
மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை செய்தன. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 183 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 94 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 652 ரன்கள் குவித்துள்ளதோடு, ஆரஞ்சு தொப்பியையும் தட்டிச்சென்றார். இந்த சீசனில் 600 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். ஒரு ஐபிஎல் சீசனில் ராகுல் 600 ரன்கள் எடுத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
மேலும் ஐபிஎல் தொடரின் ஒரு சீசனில் 600 ரன்களை கடந்த நான்காவது இந்திய வீரர் என்ற பெருமையையும் ராகுல் தட்டிச்சென்றார். இந்த சீசனில் இதுவரை ராகுல் ஆறு முறை அரைசதம் அடித்துள்ளார். ராகுல் கடந்த சீசன்களில் விளையாடிய 38 போட்டிகளில் 725 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் இந்த முறை 13 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 652 ரன்கள் குவித்துள்ளார்.
இந்த சீசனில் பேட்டிங்கில் அசத்திவரும் ராகுல் அதிக சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் 32 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதிக பவுண்டரிகள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் ராகுல் 65 பவுண்டரிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். #KingsXIPunjab #KLRahul #VIVOIPL #IPL2018